செய்திகள்

டெல்லி செங்கோட்டையில் மேலும் 41 குண்டுகள் சிக்கின

Published On 2017-02-08 09:40 GMT   |   Update On 2017-02-08 09:40 GMT
டெல்லி செங்கோட்டையில் உள்ள ஒரு பழைய கிணற்றில் மேலும் 41 குண்டுகள் சிக்கின. இது செங்கோட்டைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி:

டெல்லி செங்கோட்டை வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாகும். எனவே அது முழுநேரமும் போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் செங்கோட்டையில் உள்ள ஒரு பழைய கிணற்றை கடந்த சனிக்கிழமை சுத்தப்படுத்தினார்கள். அப்போது உள்ளே 4 மர்ம பெட்டிகள் இருந்தன. அதற்குள் 5 பீரங்கி குண்டுகள், 131 துப்பாக்கி குண்டுகள் மற்றும் வெடி பொருட்கள் இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினார்கள்.

இதைத்தொடர்ந்து அந்த கிணற்றில் மேலும் ஆய்வு செய்யப்பட்டது. தேசிய பாதுகாப்பு படை துணை கமி‌ஷனர் ஜதின்நர்பால் தலைமையில் தொடர்ந்து சோதனை செய்தனர். அந்த கிணறு பாழடைந்த நிலையில் இருந்தது.

கிணற்றில் இருந்த தண்ணீர் கெட்டுபோய் வி‌ஷமாக மாறி இருந்தது. எனவே எச்சரிக்கையாக சோதனை மேற்கொண்டனர். தண்ணீருக்குள் செலுத்தி பார்க்க கூடிய கேமரா மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது மேலும் 2 பெட்டிகள் உள்ளே கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை வெளியே எடுத்து பார்த்தபோது 39 பீரங்கி குண்டுகள், 2 கையெறி குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள், ஆயுதங்கள் இருந்தன.

இவற்றை யார் கொண்டுவந்தது கிணற்றில் பதுக்கி வைத்தார்கள் என்று தெரியவில்லை. இது செங்கோட்டைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து அங்கு சோதனை நடந்து வருகிறது.

Similar News