செய்திகள்
பெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்தர்

கர்நாடக அரசு 3 நாள் துக்கம்: பெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்தர் உடல் பெங்களூரு வந்தது

Published On 2019-12-29 11:08 GMT   |   Update On 2019-12-29 12:22 GMT
உடல்நலக்குறைவால் இன்று காலமான பெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்தர் உடலுக்கு பெங்களூரு பசவனகுடி பகுதியில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
பெங்களூரு:

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பெஜாவர் மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் சுவாமி விஷ்வேஷா தீர்த்தர். 88 வயதான இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

நேற்று இரவு மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவர் உடுப்பியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


   
இந்நிலையில், சுவாமி விஷ்வேஷா தீர்த்தர் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா மற்றும் பல்வேறு மத்திய - மாநில மந்திரிகள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

சுவாமி விஷ்வேஷா தீர்த்தரின் மறைவுக்கு கர்நாடக அரசு சார்பில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என எடியூரப்பா அறிவித்தார்.

உடுப்பியில் உள்ள மடத்துக்கு சென்ற எடியூரப்பா சுவாமியின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார். அவரது உடலுக்கு மாநில அரசின் சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையும் செலுத்தப்பட்டது.



பின்னர், சுவாமி விஷ்வேஷா தீர்த்தரின் உடல் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரு நகருக்கு கொண்டு வரப்பட்டது. பெங்களூருவில் உள்ள பசவனகுடி பகுதியில் அவரது இறுதிச்சடங்குகள நடைபெற்று வருகின்றன.

மறைந்த சுவாமி விஷ்வேஷா தீர்த்தர் தீவிரமான இந்து மதப்பற்றாளராகவும் சிறந்த பக்திமானாகவும் வாழ்ந்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக மூத்த தலைவர் அத்வானி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் இவரது சீடர்களில் ஒருவராக இருந்தனர்.



கோசாலைகள் மூலமாக பசுக்கள் பாதுகாப்பு, பசுவதை தடுப்பு, அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டும் ராமஜென்ம பூமி இயக்கம் ஆகிய கொள்கைகளில் அவர் திடமாக நின்றாலும், ரம்ஜான் நோன்பு காலத்தில் மடத்தின் சார்பாக முஸ்லிம்களுக்கு ‘இப்தார் விருந்து’ படைத்து மதநல்லிணக்கத்துக்கு சிறந்த உதாரணமாகவும் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News