செய்திகள்
பார்சல் ரெயில்கள்

லாக்டவுன் காலத்தில் இதுவரை 2,067 பார்சல் ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன: ரெயில்வே தகவல்

Published On 2020-05-06 15:16 GMT   |   Update On 2020-05-06 16:18 GMT
லாக்டவுன் காலத்தில் இதுவரை 2067 பார்சல் ரெயில்கள் இயக்கப்பட்டு 54 ஆயிரத்து 292 டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன என ரெயில்வேத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் கடந்த 25-ந்தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் அரசு சார்பில் பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல ரெயில்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை 2067 பார்சல் ரெயில்கள் இயக்கப்பட்டு 54 ஆயிரத்து 292 டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ள ரெயில்வேத்துறை, இதன்மூலம் 19.77 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

2067 ரெயில்களும் 82 வழித்தடங்களில் இந்தியாவின் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்டுள்ளன.



பால் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களை அதிகமாக உற்பத்தி செய்யும் குஜராத், ஆந்திரா போன்ற இடங்களில் இருந்து மற்ற இடத்திற்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டன. விவசாய பொருட்கள், மருத்துவ உபகரணங்களும் ஒரு இடத்தில் இருந்து நாட்டின் பல இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

நேற்று மட்டும் 66 பார்சல் ரெயில் இயக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 57.14 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
Tags:    

Similar News