செய்திகள்
ராஜஸ்தான் மாநில பா.ஜனதா தலைவர் சதிஷ் பூனியா

ராஜஸ்தான் முதல்வரால் உருவாக்கப்பட்ட அரசியல் நாடகம்: பா.ஜனதா மாநில தலைவர் பதிலடி

Published On 2020-06-12 14:21 GMT   |   Update On 2020-06-12 14:21 GMT
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வருவது முதல்வர் அசோக் கெலாட்டால் உருவாக்கப்பட்ட அரசியல் நாடகம் என்று பா.ஜனதா தலைவர் பதிலடி கொடுத்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி குமாரசாமி கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. குமாரசாமி முதல்வராக இருந்தார். திடீரென காங்கிரஸ் கட்சியில் உள்ள சில எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. அதன்பின் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் சில எம்எல்ஏ-க்களுடன் வெளியேறினார். இதனால் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது. பின்னர் சிவ்ராஜ் சவுகான் முதல்வராக பதவி ஏற்றார்.

இதேபோன்று தற்போது ராஜஸ்தானிலும் பண அதிகாரம் மூலம் ஆட்சியை கலைக்க முயற்சி நடக்கிறது. இதனால் விசாரணை நடத்த வேண்டும் என சட்டசபைக்கான காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா மாநில ஊழல் தடுப்பு அமைப்பில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இது அனைத்தும் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டால் நடத்தப்படும் நாடகம் என அம்மாநில பா.ஜனதா தலைவர் சதிஷ் பூனியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சதிஷ் பூனியா கூறுகையில் ‘‘மாநிலங்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த அரசியல் டிராமா முதலமைச்சரால் தொடங்கப்பட்டதாகும். காங்கிரஸ் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. ஆதாரத்தை காட்ட வேண்டும். அவதூறுக்கு இது போதுமானது. நாங்கள் மீண்டும் மீண்டும் கெட்டுக் கொண்டிருக்க மாட்டோம். சட்ட நடவடிக்கை எடுக்கும் எண்ணம் எங்களிடம் உள்ளது.

முதல்வர் தனது அறிக்கை மூலம் அரசியல் வைரஸை வீசியுள்ளார். இது ராஜஸ்தான் அரசியலில் கொரோனா வைரசை விட மிகவும் மோசமானது.

இது காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் பூசல். சச்சின் பைலட் அரசிலுக்குள் நுழையும்போது முதல்வர் பதவி கிடைக்கும் எண்ணத்துடன் வந்தார். பெரும்பாலான மக்கள் அவர்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்ற நிலையில்தான் வாக்களித்தனர்’’ என்றார்.
Tags:    

Similar News