3 முறை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை: 5 சிறுநீரகங்களுடன் வாழும் விஞ்ஞானி
- 5-வதாக ஒரு சிறுநீரகம் பொருத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
- 10 நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஜ்சார்ஜ் செய்யப்பட்டார்.
புதுடெல்லி:
இந்திய விஞ்ஞானி தேவேந்திர பார்லேவர் சிறுநீரக பாதிப்பு காரணமாக டெல்லி பரிதாபாத்தில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 47 வயதான அவர் கடந்த 2010-ம் ஆண்டு முதல் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வந்தார்.
2011-ம் ஆண்டு அவரது முதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அவரது தாயாரிடம் இருந்து வந்தது. ஆனால் ஒரு வருடம் மட்டுமே வேலை செய்ய முடிந்தது. இரண்டாவது உறுப்புமாற்று அறுவை சிகிச்சை 2012-ம் ஆண்டு நடந்தது.
பின்னர் 2022-ம் ஆண்டு பார்லேவருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. பின்னர் மூளைச்சாவு அடைந்த ஒருவரிடம் இருந்து அவருக்கு சிறுநீரகம் தானம் கிடைத்தது.
அதன்படி கடந்த மாதம் ஆஸ்பத்திரியில் 4 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது அவரது உடலில் நான்கு செயல்படாத சிறுநீரகங்கள் இருந்ததால் அறுவை சிகிச்சை சவாலாக இருந்துள்ளது.
பின்னர் 5-வதாக ஒரு சிறுநீரகம் பொருத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் ஒன்று மட்டுமே செயல்படுகிறது. அதன்பிறகு தொடர் சிகிச்சை மூலமாக குணமடைந்து 10 நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஜ்சார்ஜ் செய்யப்பட்டார்.