இந்தியாவை காப்பாற்றியவர் 'கோட்சே'.. சர்ச்சைப் பேராசிரியருக்கு DEAN பதவி கொடுத்து அழகு பார்த்த NIT
- கோழிக்கோடில் இயங்கும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT) இயந்திர பொறியியல் துறையில் கடந்த 25 ஆண்டுகளாக பேராசிரியராக பணியாற்றி வந்தவர் சைஜா ஆண்டவன்.
- இந்தியாவைக் காப்பாற்றியதற்காக கோட்சேவைப் பற்றி பெருமைப்படுகிறேன்
கேரள மாநிலம் கோழிக்கோடில் இயங்கும் மத்திய அரசு கல்வி நிறுவனமான தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT) இயந்திர பொறியியல் துறையில் கடந்த 25 ஆண்டுகளாக பேராசிரியராக பணியாற்றி வந்தவர் சைஜா ஆண்டவன். இவர் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை புகழ்பாடும் கமெண்ட் ஒன்றை இவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கினார்.
கடந்த ஜனவரி 30, 2024, காந்தியின் நினைவு தினத்தன்று சைஜா ஆண்டவன் பேஸ்புக்கில், "இந்தியாவைக் காப்பாற்றியதற்காக கோட்சேவைப் பற்றி பெருமைப்படுகிறேன்" என்று ஒரு கருத்தைப் பதிவிட்டார். இதற்காக அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வன்முறையைத் தூண்டும் நோக்கதுடன் கருத்து தெரிவித்ததாக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 153 இன் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
தொடர்ந்து அவர் ஜாமீனில் வெளிவந்தார். தனது கருத்து குறித்து பேசிய சைஜா, காந்திஜியின் கொலையைப் பாராட்டுவதற்காக நான் கருத்து தெரிவிக்கவில்லை. நான் ஒருபோதும் அவ்வாறு செய்ய விரும்பவில்லை. கோட்சேவின் " நான் ஏன் காந்தியைக் கொன்றேன்" என்ற புத்தகத்தைப் படித்திருந்தேன்.
கோட்சேவும் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர்தான். அவரது புத்தகத்தில் சராசரி மனிதனுக்குத் தெரியாத ஏராளமான தகவல்களும் வெளிப்பாடுகளும் உள்ளன. கோட்சே தனது புத்தகத்தில் நமக்கு அறிவூட்டியுள்ளார் என்றும் தான் எந்த அரசியல் கட்சியையும் சார்தவர் இல்லை என்றும் தான் கல்வியாளர் மட்டுமே என்றும் தனது கருத்தை நியாயப்படுத்தினார்.
இந்நிலையில் பேராசிரியர் சைஜா தற்போது தேசிய தொழில்நுட்பக் கழகத்தின், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு துறை டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.