கும்பமேளாவில் பட்டினியால் இறக்கும் பக்தர்கள்-குற்றம் சாட்டும் சமாஜ்வாடி: ஹேமமாலினி பதிலடி
- சிவராத்திரி விழாவை முன்னிட்டு 26-ம் தேதி புனித நீராடலுடன் மகா கும்பமேளா நிறைவடைகிறது.
- திரிவேணி சங்கமமான பிரயாக்ராஜில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. வரும் 26-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு 26-ம் தேதி புனித நீராடலுடன் மகா கும்பமேளா விழா நிறைவடைகிறது. திரிவேணி சங்கமமான பிரயாக்ராஜில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள்.
கும்பமேளா முடிவடைய இன்னும் 15 நாள் இருக்கும் நிலையில், இதுவரை 45 கோடி பக்தர்களுக்கு மேல் புனித நீராடியுள்ளனர் என உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, சமாஜ்வாடியின் மாநிலங்களவை எம்பியான ராம் கோபால் யாதவ் கூறியதாவது:
மோசமான ஏற்பாடுகளால் மக்கள் அவதிப்படுகின்றனர். உணவு மற்றும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இருக்கிறது.
அங்கு மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். நெரிசலில் சிக்கி சிலர் இறந்தனர். இப்போது மக்கள் பசியால் இறக்கின்றனர்.
பெட்ரோல், கார்களுக்கு டீசல் இல்லை. மக்களுக்கு உணவு இல்லை. தண்ணீர் கூட கிடைக்கவில்லை. உத்தர பிரதேச அரசு அலகாபாத்தை வாகனம் இல்லாத பகுதி ஆக்கியது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது. இப்படி எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா என காட்டமாக விமர்சித்தார்.
இந்நிலையில், சமாஜ்வாடி எம்.பி.யின் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க. எம்.பி.யான ஹேமமாலினி பதில் அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:
மகா கும்பமேளா ஒரு வெற்றி. சில இடங்களில் பிரச்சனைகள் உள்ளன. ஆனால் எல்லா இடங்களிலும் இல்லை. அனைவரும் நீராட விரும்புவதால் ஏராளமானோர் அங்கு செல்கின்றனர்.
இது மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எல்லோரும் அதைப் பாராட்டுகிறார்கள். அங்கு சென்ற எனக்கு தெரிந்தவர்கள், மிக நன்றாக நிர்வகிக்கிறார்கள் என்கிறார்கள். விபத்து நடந்தது, ஆனால் கும்பமேளா தோல்வி அடைந்தது என அர்த்தமல்ல என தெரிவித்தார்.