கும்பமேளாவில் மூத்த குடிமக்கள் 2000 பேர் புனித நீராட ஏற்பாடு செய்த உ.பி. அரசு
- மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்து வருகிறது.
- கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் நீராடி வருகின்றனர்.
லக்னோ:
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்து வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.
கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில், கும்பமேளா முடிவில் 2,000 மூத்த குடிமக்கள் புனித நீராடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
சமூக நலத்துறை, தேசிய மருத்துவக் கழகம் மற்றும் இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்திக் கழகம் உடன் இணைந்து முக்கிய ஆதரவை வழங்கி வருகிறது.
கும்பமேளாவில் முதன்முறையாக யோகி ஆதித்யநாத் அரசு முதியோர் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோருக்கான சிறப்பு முகாமை தொடங்கியுள்ளது.
சமூக நலத்துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த முகாமில் தேவைப்படுபவர்களுக்கு இலவச பரிசோதனைகள் மற்றும் உதவி சாதனங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த முன்முயற்சியின் மூலம் முதியோர், குறிப்பாக அரசால் நடத்தப்படும் முதியோர் இல்லங்களில் உள்ளவர்கள், அத்தியாவசிய சேவைகளைப் பெறுவதையும், கும்பமேளாவின் தெய்வீக உணர்வை அனுபவிப்பதையும் உறுதி செய்வதில் அரசு முன்னேற்றம் கண்டுள்ளது என தெரிவித்துள்ளது.