இந்தியா

மணிப்பூர் விவகாரம்- பெண்களை வீடியோ எடுத்த நபர் கைது

Published On 2023-07-25 03:43 IST   |   Update On 2023-07-25 03:43:00 IST
  • இது தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • வீடியோ எங்கிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டது என்பது குறித்தும் தீவிர விசாரணை.

மணிப்பூர் மாநிலம், இம்பால் நகரில் குகி இனத்தை சேர்ந்த 2 பெண்களை ஆடைகள் இன்றி ஊர்வலமாக இழுத்து சென்றனர். அவர்களை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய கொடூரமும் அரங்கேறியது. அதை தடுத்த 2 பேர் கொல்லப்பட்டனர். பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்து வரப்பட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

மே 4ம் தேதி தங்கள் சமூகத்தை சேர்ந்த மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதாக குகி இன தலைவர்கள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டனர்.

இதனால் மணிப்பூரில் கடந்த 4 நாட்களாக பதட்டம் நீடிக்கிறது. பல இடங்களில் வீடுகளுக்கு தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. சில இடங்களில் பழங்குடி இனத்தவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் பல கிராமங்களில் மிகப்பெரிய கலவரம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் மற்றும் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 13 ஆயிரம் பேர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட மேலும் பலர் வீடியோ காட்சி பதிவுகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில், பெண்களை வீடியோ எடுத்த நபரை கைது செய்து விசாரணை அமைப்புகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளன.

மேலும், வீடியோ எங்கிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்த அமைப்புகள் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News