இந்தியா (National)

மகாராஷ்டிராவில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Published On 2024-10-05 08:01 GMT   |   Update On 2024-10-05 08:53 GMT
  • கால்நடை வளர்ப்புத் துறை சார்ந்த பல திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
  • மகாராஜ் மற்றும் துறவி ராம்ராவ் மகாராஜ் ஆகியோரின் நினைவிடங்களிலும் அஞ்சலி செலுத்தினார்.

மும்பை:

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் சென்றார்.

போகாராதேவியில் உள்ள ஜகதாம்பா மாதா கோவிலில் அவர் முதலில் தரிசனம் செய்தார். வாஷிமில் உள்ள துறவி சேவாலால் மகாராஜ் மற்றும் துறவி ராம்ராவ் மகாராஜ் ஆகியோரின் நினைவிடங்களிலும் அஞ்சலி செலுத்தினார்.

அதை தொடர்ந்து பிரதமர் மோடி காலை 11.30 மணியளவில் பஞ்சாரா சமூகத்தின் வளமான பாரம்பரியத்தை போற்றும் பஞ்சாரா விராசத் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். 12 மணியளவில் ரூ.23,300 கோடி மதிப்புள்ள விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறை சார்ந்த பல திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.

9.4 கோடி விவசாயிகளுக்கு சுமார் ரூ. 20,000 கோடி மதிப்புள்ள 18-வது தவணையை வழங்கினார். பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த நிதி சுமார் ரூ.3.45 லட்சம் கோடியாகும். மேலும், சுமார் ரூ.2,000 கோடி வழங்கும் நமோஷேத்கரி மகாசன்மன் நிதி திட்டத்தின் 5-வது தவணையையும் தொடங்கி வைத்தார்.

வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் ரூ.1,920 கோடி மதிப்பிலான 7,500-க்கும் மேற்பட்ட திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பிரதமர் மோடி மாலை 4 மணியளவில் தானே செல்கிறார். அங்கு ரூ.32,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

ரூ.14,120 கோடி மதிப்பிலான மும்பை மெட்ரோ ரெயில் பாதை-3ன் பி.கே.சி. முதல் ஆரே வரையிலான ஜே.வி.எல்.ஆர். பிரிவை தொடங்கி வைக்கிறார். ரூ.12,200 கோடி செலவில் தானே ஒருங்கிணைந்த மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

மகாராஷ்டிராவில் மொத்தம் ரூ.56 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை மோடி தொடங்கி வைக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News