இந்தியா

சங்கிலியால் கட்டி அழைத்து வந்தார்கள்.. அமெரிக்காவால் நாடுகடத்தப்பட்ட இந்தியர் பரபரப்பு தகவல்

Published On 2025-02-06 08:37 IST   |   Update On 2025-02-06 08:37:00 IST
  • விமானம் மூலம் திரும்ப அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
  • சர்வதேச விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கியது.

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற அந்நாட்டு அதிபர் டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து ஆவணமின்றி அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டினர் விமானம் மூலம் திரும்ப அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் அமெரிக்காவில் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் ஆவணமின்றி இருப்பதாக கண்டறியப்பட்டது. இதில் முதற்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்காவின் சி-17 ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அந்த விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மதியம் தரையிறங்கியது.

இந்த விமானத்தில் நாடு கட்டத்தப்பட்ட சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அழைத்து வரப்பட்டதாக நாடுகடத்தப்பட்டவர்களில் ஒருவரான ஜஸ்பால் சிங் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் விமானத்தில் ஏறியதும் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், அமிர்தசரஸ் வந்தபிறகு தான் சங்கிலி அவிழ்க்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

நேற்று அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்களில் 33 பேர் அரியானா மற்றும் குஜராத் மாநிலங்களை சேர்ந்தவர்கள், 30 பேர் பஞ்சாப் மற்றும் தலா மூன்று பேர் மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இருவர் சண்டிகரைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவித்தன.

நாடுகடத்தப்பட்டவர்களில் 19 பேர் பெண்கள், 13 பேர் மைனர்கள் ஆவர். நாடுகடத்தப்பட்டவர்கள் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இருந்து போலீஸ் வாகனங்களில் சொந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அந்த வகையில், நேற்றிரவு தனது சொந்த ஊருக்கு சென்ற ஜஸ்பால், சட்டப்பூர்வ வழியில் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதால், ஒரு பயண முகவரால் ஏமாற்றப்பட்டதாகக் கூறினார்.

"முறையான விசா மூலம் என்னை அனுப்புமாறு முகவரிடம் கேட்டிருந்தேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றிவிட்டார்," என்று ஜஸ்பால் கூறினார். இதற்காக அவர் அந்த முகவரிடம் ரூ.30 லட்சம் கொடுத்ததாக கூறினார்.

Tags:    

Similar News