null
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா: பாகிஸ்தான், வங்கதேசம் வெளியேற்றம்
- பாகிஸ்தான் இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியை சந்தித்தது.
- வங்கதேசம் இன்று நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்ததால் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். ஏ பிரிவில் மொத்தம் 6 போட்டிகள் நடைபெறும்.
முதல் போட்டியில் நியூசிலாந்திடம் பாகிஸ்தான் 60 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. வங்கதேசத்திற்கு எதிரான 2-வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற 3 போட்டியில் பாகிஸ்தானை இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. பாகிஸ்தான் 2 போட்டிகள் விளையாடி இரண்டிலும் தோல்வியடைந்திருந்தது.
இன்று நடைபெற்ற 4-வது போட்டியில் வங்கதேசத்தை நியூசிலாந்து வீழ்த்தியிருந்தது. இதன்மூலம் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது. அதேபோல் இந்தியாவும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
பாகிஸ்தான் தனது கடைசி மற்றும் ஏ பிரிவின் 5-வது வங்கதேசத்தை எதிர்கொள்ளும். இந்த போட்டியின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. வெற்றி பெறும் அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்ற திருப்தியோடு தொடரில் இருந்து வெளியேறும்.
இந்தியா தனது கடைசி மற்றும் ஏ பிரிவின் 6-வது போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி ஏ பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும்.