கிரிக்கெட்

சேப்பாக்கம் டெஸ்ட்: எம்எஸ் டோனி சாதனையை சமன் செய்த அஷ்வின்

Published On 2024-09-19 15:35 GMT   |   Update On 2024-09-19 15:35 GMT
  • சதம் அடித்து அசத்தியுள்ளார் ரவிச்சந்திரன் அஷ்வின்.
  • இந்திய அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களுடன் தடுமாறியது.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைசிறந்த ஆல்-ரவுண்டர் என்று ரவிச்சந்திரன் அஷ்வின் மீண்டும் தன்னை நிரூபித்துக் காட்டியுள்ளார். வங்கதேசம் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சரிவில் இருந்த இந்திய அணியை ஜடேஜாவுடன் சேர்ந்து மீட்டதோடு, சதம் அடித்து அசத்தியுள்ளார் ரவிச்சந்திரன் அஷ்வின்.

இந்த இன்னிங்ஸில் 112 பந்துகளில் 102 ரன்களை எடுத்துள்ள அஷ்வின், முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். போட்டி துவங்கியதில் இருந்து இரண்டு இடைவெளியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களுடன் தடுமாறியது.

 


அப்போது களமிறங்கிய அஷ்வின் இன்றைய ஆட்டநேரம் முடியும் வரை தனது விக்கெட்டை கொடுக்காமல், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இன்றைய ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் போட்டிகளில் தனது ஆறாவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இதன் மூலம் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்களை எடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட்டில் வெற்றிகர கேப்டனான எம்எஸ் டோனி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆறு சதங்களை மட்டும் அடித்துள்ளார். அந்த வகையில், இன்றைய போட்டியில் சதனம் அடித்ததன் மூலம் அஷ்வின் எம்எஸ் டோனி போன்று டெஸ்ட் போட்டிகளில் ஆறு சதங்களை நிறைவு செய்துள்ளார். சதம் அடித்த அஷ்வினுக்கு முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News