108 வயதில் கல்வி கற்கும் கம்பம் மூதாட்டி: 100-க்கு 97 மதிப்பெண்கள் பெற்று அசத்தினார்
- தமிழும், மலையாளமும் எழுத மற்றும் படிக்க கற்றுக்கொண்டார்.
- தள்ளாத வயதிலும் ஆர்வமுடன் கல்வி அறிவை பெற்ற கமலக்கன்னிக்கு வண்டன்மேடு பஞ்சாயத்து சார்பில் பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் கமலக்கன்னி(108). கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே பிழைப்புக்காக இடுக்கி மாவட்டம் வண்டன்மேட்டில் உள்ள ஏலக்காய் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டார். குடும்ப வறுமை காரணமாக 2-ம் வகுப்புவரை மட்டுமே படித்த கமலக்கன்னி அதன்பிறகு வேலைக்கு சென்றுவிட்டதால் தன்னால் படிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டார்.
தானும் படித்திருந்தால் நல்ல வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி இருக்க முடியும் என தனது உறவினர்களிடம் கூறி வந்துள்ளார். இருந்தபோதும் மீண்டும் தான் படிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் அவரிடம் விடவில்லை. கேரள அரசு சம்பூர்ணாசாக்சாத் வகுப்பு என்னும் முழுஎழுத்தறிவுவகுப்பில் கமலக்கன்னி சேர்ந்தார். அங்கு தமிழும், மலையாளமும் எழுத மற்றும் படிக்க கற்றுக்கொண்டார்.
எழுத்து தேர்வு முடிவில் கமலக்கன்னி 100க்கு 97 மதிப்பெண்கள் பெற்று அனைவரின் பாராட்டையும் பெற்றார். தள்ளாத வயதிலும் ஆர்வமுடன் கல்வி அறிவை பெற்ற கமலக்கன்னிக்கு வண்டன்மேடு பஞ்சாயத்து சார்பில் பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது. அப்போது அவர் தெரிவிக்கையில், இன்றைய சூழலில் கல்வி கற்க அனைத்து வசதிகளும் உள்ளது. இருந்தபோதும் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல தயங்குகின்றனர். எங்கள் காலத்தில் பள்ளிக்கு செல்லவே நீண்டதூரம் செல்ல வேண்டும். இதனால் எங்களை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டு வேலைக்கு வைத்து கொண்டனர். எனவே மாணவர்கள் கற்கும் காலத்தில் கல்வியை உணர்ந்து படிக்க வேண்டும் என்றார்.