தமிழ்நாடு

நாகை மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு

Published On 2024-08-24 08:17 GMT   |   Update On 2024-08-24 08:18 GMT
  • மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர்.
  • கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகப்பட்டினம்:

தமிழக மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். அவர்கள் அவ்வாறு மீன் பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் மற்றும் எல்லைதாண்டி வந்ததாக கூறி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன்படி, நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த நாகரத்தினம், சஞ்சை (வயது 23), பிரகாஸ் (35), சுதந்திர சுந்தர், சந்துரு (23), ரமேஷ் (47), ஆனந்தவேல், நம்பியார்நகரை சேர்ந்த சிவராஜ் (45), வர்சன் (19), சுமன் (25), புதியகல்லாரை சோந்த ராஜேந்திரன் (45) ஆகிய 11 மீனவர்கள் சாந்தி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று முன்தினம் இரவு அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் 41 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி விசைப்படகுடன் மேற்படி 11 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர்.

தொடர்ந்து, அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.

கடலில் மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் சக மீனவர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மீனவர்கள், உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News