செய்திகள்

குரோம்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண் குத்திக்கொலை

Published On 2016-06-14 20:59 GMT   |   Update On 2016-06-14 21:04 GMT
குரோம்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு காரணம் என்ன? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:

சென்னை குரோம்பேட்டை பாரதிபுரம் நெல்லையப்பர் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ஜெயமுருகன். இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (வயது 37). இவர்களுக்கு கமலகார்த்திக் (12) என்ற மகனும், அனுஷ்கா (6) என்ற மகளும் உள்ளனர்.

ஜெயமுருகன் நேற்று காலை வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். அவருடைய 2 குழந்தைகளும் பள்ளிக்கு சென்று இருந்தனர். வீட்டில் கிருஷ்ணவேணி மட்டும் தனியாக இருந்தார்.

பள்ளி சென்ற குழந்தைகளை வழக்கமாக மாலையில் கிருஷ்ணவேணி தான் அழைத்து வருவார். நேற்று மாலை வரை குழந்தைகளை அழைத்து செல்ல யாரும் வரவில்லை. இதனால் குழந்தைகள் தவிப்பதை பார்த்த பள்ளி நிர்வாகம் ஜெயமுருகனுக்கு இது குறித்து தகவல் தெரிவித்தது.

உடனே ஜெயமுருகன் தன்னுடைய வீட்டுக்கு செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் யாரும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் வீட்டுக்கு அருகில் உள்ள உறவினரை தொடர்பு கொண்டு தன்னுடைய வீட்டில் சென்று பார்க்குமாறு கூறினார்.

ஜெயமுருகனின் வீட்டுக்கு அவருடைய உறவினர் சென்ற போது வீட்டில் சத்தமாக டி.வி. ஓடி கொண்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த அவர் அங்கு கிருஷ்ணவேணி கழுத்தில் கத்திக்குத்துடன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது பற்றி ஜெயமுருகனுக்கு உறவினர் தகவல் கொடுத்தார். உடனே இது குறித்து சிட்லபாக்கம் போலீசில் ஜெயமுருகன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

வீட்டில் எந்த பொருட்களும் கொள்ளை போகவில்லை என போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து கிருஷ்ணவேணியின் உடலை கைப்பற்றிய போலீசார், அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News