செய்திகள்

கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவிகள் 56 பேருக்கு வாந்தி - மயக்கம்

Published On 2016-08-22 08:06 GMT   |   Update On 2016-08-22 08:06 GMT
கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவிகள் 56 பேருக்கு வாந்தி - மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை:

கோவை அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் 56 மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். கல்லூரி விடுதியில் நேற்று மதியம் பருப்பு சாதமும், இரவில் தக்காளி சாதமும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று திடீரென சாதத்தை சாப்பிட்ட மாணவிகள் சினேகா(18), பிரியதர்சினி (16), துர்கா(17), கவிதா (18), சித்ரா(20), காயத்ரி (19), சாலினி (18), கல்பனா (18), சத்யபிரியா (16), கிருத்திகா (15) உள்பட 26 மாணவிகளுக்கு வயிற்றுபோக்கு மற்றும் வாந்தி- மயக்கம் ஏற்பட்டது.

இதனால் கல்லூரி விடுதி காப்பாளர், கல்லூரி முதல்வருக்கு தகவல் தெரிவித்தார். இதைதொடர்ந்து உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்ட மாணவிகளை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இன்று காலையில் மேலும் 30 மாணவிகளுக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்கள் அனைவரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை அரசு ஆஸ்பத்திரி டீன் எட்வின் ஜோ, சூப்பிரண்டு அசோகன், துணை சுகாதார இயக்குனர் சோமசுந்தரம் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதுபற்றி டீன் எட்வின் ஜோ நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்டதில் மாணவிகள் 56 பேருக்கு வயிற்றுபோக்கு, வாந்தி - மயக்கம் ஏற்பட்டது. இதில் நேற்று இரவில் 26 மாணவிகளும், இன்று 30 மாணவிகளும் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அனைவரும் நலமாக உள்ளனர்.

மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவுகள், மற்றும் குடிநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் பின்னரே உண்மையான காரணம் தெரிய வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News