செய்திகள்

கடலூரில் கார் மெக்கானிக் குத்திக்கொலை: பதட்டம்-போலீஸ் குவிப்பு

Published On 2017-01-15 11:12 GMT   |   Update On 2017-01-15 11:12 GMT
கடலூரில் கார் மெக்கானிக் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தையும் அதிர்ச்சியையும் எற்படுத்தி உள்ளது.

கடலூர்:

கடலூர் வன்னியர் பாளையம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 50). மெக்கானிக். இவர் திருப்பாதிரிப்புலியூர் சூரப்பன்நாயக்கன் சாவடி அய்யனார் கோவில் அருகில் சொந்தமாக கார் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வந்தார்.

நேற்று பொங்கலை முன்னிட்டு முருகன் அவரது கடையில் பொங்கல் கொண்டாடினார். பின்னர் இரவு அவர் கடைக்குள்ளேயே தூங்கினார்.

இந்த நிலையில் காவலாளி பாதாளம் (28) நள்ளிரவு 1 மணியளவில் அங்கு வந்தார். மெக்கானிக் முருகன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வெளியே அலறியபடி வெளியே ஓடிவந்தார்.

இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த முருகனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் முருகனை யாரோ கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. மேலும் முருகனை கொலை செய்தது யார்? தொழில் போட்டியில் முன்விரோதம் காரணமாக யாரேனும் அவரை கொலை செய்தனரா? பொங்கல் கொண்டாட்டத்தில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் யாரேனும் அவரை கொலை செய்தனரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முருகனின் செல்போனை கைப்பற்றி அவர் கடைசியாக யாரிடம் பேசினார் என்பது குறித்து தகவல் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

அந்த கடையில் காவலாளியாக வேலை பார்த்த பாதாளத்திடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் கடலூர் நகரில் பெரும் பதட்டத்தையும் அதிர்ச்சியையும் எற்படுத்தி உள்ளது.

அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இறந்த முருகனுக்கு வசந்தி என்ற மனைவியும், ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

Similar News