செய்திகள்

சரக்கு லாரியில் கடத்தி செல்ல முயன்ற ஹவாலா பணம் பறிமுதல்: 3 பேர் கைது

Published On 2017-02-01 05:41 GMT   |   Update On 2017-02-01 05:41 GMT
மும்பையில் இருந்து கேரளாவிற்கு, பெங்களூரு வழியாக சரக்கு லாரியில் ஹவாலா பணத்தை கடத்தி செல்ல முயன்ற 3 பேர் கொண்ட கும்பலை பெங்களூரு போலீசார் நேற்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.
ஓசூர்:

மும்பையில் இருந்து கேரளாவிற்கு, பெங்களூரு வழியாக சரக்கு லாரியில் ஹவாலா பணத்தை கடத்தி செல்ல முயன்ற 3 பேர் கொண்ட கும்பலை பெங்களூரு போலீசார் நேற்று மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ரூ 4 கோடியே 13 லட்சம் மீட்கப்பட்டது.

ஹவாலா பணம் கடத்தல் முயற்சி குறித்து, பெங்களூரு சிட்டி கிரைம் பிராஞ்ச் சூப்பிரண்டு ஒபலேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வந்த ஒரு சரக்கு லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். அதை சோதனையிட்டபோது, லாரியில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு மூட்டைகளின் நடுவே, பெட்டிகளில் பணம் கட்டு, கட்டாக இருந்ததை கண்டு கைப்பற்றினர். விசாரணையில் அந்த பணம், மும்பையில் இருந்து, பெங்களூரு வழியாக கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. பெட்டிகளில் இருந்து பணம் ரூ 4 கோடியே 13 லட்சத்தை போலீசார் கைப்பற்றி, இது தொடர்பாக, கேரளாவை சேர்ந்த அப்சல்(23), அப்துல் நசீர் மற்றும் சம்சுத்தீன்(39) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் விசாரணையில் இவர்கள் கமி‌ஷன் அடிப்படையில், ஹவாலா பணத்தை கொண்டு போய் சேர்க்கும் வேலை பார்த்து வந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதற்காக அப்சல், பெங்களூரு மாநகரத்தில், வித்யாரண்யபுரா, பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். மேலும் அந்த வீட்டுக்கு அடிக்கடி வாகனங்களில் மர்ம நபர்கள் வந்து செல்வது, அக்கம் பக்கத்தினரிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது குறித்த கிரைம் பிராஞ்ச் போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில், கடந்த 1 வாரமாக போலீசார் அந்த வீட்டை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று அந்த வீட்டருகே வந்த ஒரு சரக்கு லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் 35 வெங்காய மூட்டைகள் மற்றும் 10 உருளைக்கிழங்கு மூட்டைகள் இருந்தன, அதற்கு நடுவே, பண பெட்டிகள் இருந்தன. போலீசார் அதனை கைப்பற்றினர். பெட்டிகளில் புத்தம்புது 2000 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் இருந்தன. மற்றும் 500 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகளும் இருந்தன, கைப்பற்றப்பட்ட தொகை, ரூ 4 கோடியே 13 லட்சமாகும். இதையடுத்து லாரியில் வந்த அப்சல், சம்சுத்தீன்.. ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், நசீர் என்பவரும் பிடிபட்டார். மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து கைப்பற்றிய ஹவாலா பணத்தை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Similar News