செய்திகள்

புழல் ஜெயிலுக்குள் செல்போன், கஞ்சா வீசமுயன்ற 2 பேர் கைது

Published On 2017-04-06 08:02 GMT   |   Update On 2017-04-06 08:02 GMT
புழல் ஜெயிலுக்குள் செல்போன், கஞ்சா வீச முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கு ஜெயில் காவலர்கள் உடந்தையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்குன்றம்:

புழல், சிறைக்காவலர் குடியிருப்பு பகுதியில் நேற்று நள்ளிரவு புழல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் வண்டியை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.

அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்கள் பழவந்தாங்கல் பக்தவச்சலம் நகரை சேர்ந்த தினேஷ், மாங்காடு, ஆகாஷ் நகரை சேர்ந்த வெங்கடேஷ் என்பது தெரிந்தது. அவர்களிடம் சோதனை நடத்திய போது, 2 செல்போன்கள், 3 சார்ஜர், 2 புதிய சிம்கார்டு மற்றும் ½ கிலோ கஞ்சா இருந்தது.

அவற்றை புழல் ஜெயிலில் உள்ள கைதிகளுக்கு வீச முயன்றதும் தெரிந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு ஜெயிலில் உள்ள கைதிகளுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி? இதற்கு ஜெயில் காவலர்கள் உடந்தையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News