செய்திகள்
ஆஸ்பத்திரிக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தபோது எடுத்த படம்.

ஆற்காட்டில் போலி டாக்டர் தப்பி ஓட்டம்: ஆஸ்பத்திரிக்கு ‘சீல்’

Published On 2017-04-17 04:48 GMT   |   Update On 2017-04-17 04:49 GMT
ஆற்காட்டில் பிளஸ்-2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அவரது ஆஸ்பத்திரிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
ஆற்காடு:

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே தாமரைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாஷா (வயது47). இவர் அந்த பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். இவர் பிளஸ்-2 மட்டுமே படித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அந்த கிளினிக்கில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு மற்றும் சிறிய அறுவை சிகிச்சைகள் போன்றவற்றை பாஷா செய்து வந்ததாக தெரிகிறது.

இது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஷா போலி டாக்டரா, இல்லையா என்று விசாரணை செய்வதற்காக அதிகாரிகள் அவரது கிளினிக்கிற்கு வந்தனர். அப்போது அவர் அதிகாரிகளிடம் சிக்காமல் தப்பியோடி விட்டார்.

இந்த நிலையில் மீண்டும் பாஷா கிளினிக் நடத்தி வருவதாக மாவட்ட மருத்துவ இணைஇயக்குனர் கலிவர்தனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மருத்துவ இணை இயக்குனர் கலிவர்தன், மருத்துவயியல் ஆய்வாளர் மகாலட்சுமி, ஆற்காடு தாசில்தார் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் பாஷாவின் கிளினிக்கில் சோதனை செய்வதற்காக வந்தனர்.

அதிகாரிகள் வரும் தகவல் அறிந்த பாஷா, அவரது மனைவி ரினாவுடன் கிளினிக்கை மூடிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதையடுத்து அதிகாரிகள் மருத்துவமனைக்கு ‘சீல்’ வைத்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் போலி டாக்டர் பாஷாவை தேடி வருகின்றனர்.

கிளினிக்கிற்கு ‘சீல்’ வைத்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News