செய்திகள்
லோகேஷ்

செல்போன் பேசியபோது மின்னல் தாக்கி ஐ.டி.ஐ. மாணவர் உள்பட 2 பேர் பலி

Published On 2017-10-31 04:06 GMT   |   Update On 2017-10-31 04:06 GMT
அனகாபுத்தூரில் மாடியில் நின்றுகொண்டு செல்போன் பேசிக்கொண்டு இருந்தபோது மின்னல் தாக்கி ஐ.டி.ஐ. மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
தாம்பரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் காட்சி அளிக்கிறது.

தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், குரோம்பேட்டை பகுதிகளில் காலையில் விட்டுவிட்டு பெய்து வந்த மழை, மாலையில் திடீரென இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்தது.

சென்னை அனகாபுத்தூர் கஸ்தூரிபாய்நகர் முதல்தெருவைச் சேர்ந்தவர் லோகேஷ் (வயது 19). ஐ.டி.ஐ. படித்து விட்டு வேலை தேடிக்கொண்டு இருந்தார். அனகாபுத்தூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் கிஷோர் (17). ஐ.டி.ஐ. மாணவர். இருவரும் நண்பர்கள். நேற்று இரவு அனகாபுத்தூர் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இரவு 9 மணிக்கு லோகேசின் வீட்டுக்கு கிஷோர் சென்றார். இருவரும் 2-வது மாடியில் நின்று செல்போனில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென மின்னல் தாக்கி இருவரும் மயங்கி கீழே விழுந்தனர்.

உடனே அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரையும் சோதனை செய்த டாக்டர்கள், அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News