செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

சென்னையில் இருந்து திரும்பிய புதுவை மாணவருக்கு கொரோனா

Published On 2020-05-21 10:17 GMT   |   Update On 2020-05-21 10:17 GMT
ஊரடங்கு தளர்வுக்கு பின் சென்னையில் இருந்து திரும்பிய புதுவை மாணவருக்கு பரிசோதனை நடத்தியதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவை கதிர்காமம் அரசு மருத்துவமனையில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காரைக்காலில் ஒருவர், மாகியில் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையை சேர்ந்த விமான நிலைய ஊழியர் கேரளா மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜிப்மரில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே 10 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர். மாகியை சேர்ந்த ஒருவர் இறந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் சென்னை கல்லூரியில் தங்கி படித்து வந்த மாணவர் ஒருவர் ஊரடங்கு தளர்வுக்கு பின் புதுவைக்கு திரும்பினார். அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் மேட்டுப்பாளையம் அய்யங்குட்டிபாளையத்தை சேர்ந்தவர். இவரது தந்தை மளிகை கடை நடத்தி வந்துள்ளார்.

அந்த கடையில் வாலிபர் உதவிகரமாக வேலை செய்துள்ளார். இதனால் வாலிபரின் குடும்பத்தினர், அவர்களின் கடைக்கு வந்தவர்கள் உள்ளிட்டவர்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அய்யங்குட்டிப்பாளையத்தை போலீசார் ‘சீல்’ வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News