செய்திகள்
பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் தண்ணீர் வெளியேற்றப்படும் காட்சி.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

Published On 2021-09-02 03:54 GMT   |   Update On 2021-09-02 03:54 GMT
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் இருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி பவானி ஆற்றில் வினாடிக்கு 2390 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
சத்தியமங்கலம்:

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவை மாவட்டம் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் உபரி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

நீர்வரத்து கணிசமாக இருப்பதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பவானி சாகர் அணையில் நீர்மட்டம் குறையாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர்வரத்து மீண்டும் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 102 அடியை எட்டியது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 2936 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் இருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி பவானி ஆற்றில் வினாடிக்கு 2390 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதே போல் காலிங்கராயன் வாய்க்காலுக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

பவானி சாகர் அணைக்கு இன்று காலை முதல் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதாலும், அதே அளவில் தண்ணீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதாலும் கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பவானி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள தொட்டம்பாளையம், முடுக்கன் துறை, சத்தியமங்கலம் அக்ரகாரம், பவானி ஈஸ்வரன் கோவில், சதுமுகை, கொமாரபாளையம், கொடிவேரி ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க சத்தியமங்கலம் நகராட்சி, பவானி சாகர் பேரூராட்சி சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News