தமிழ்நாடு

2 ஆயிரம் எருமைகளை தத்து எடுத்த ஆவின் நிறுவனம்

Published On 2024-06-10 04:22 GMT   |   Update On 2024-06-10 04:57 GMT
  • பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் எருமைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
  • கன்றுகளின் எடையை வாரந்தோறும் ஆவின் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை டாக்டர்கள் கண்காணிப்பார்கள்.

சென்னை:

ஆவின் நிறுவனம் கொழுப்பு சத்து நிறைந்த பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கரூர் உள்பட 12 மாவட்டங்களில் உள்ள பால் பண்ணைகளில் இருந்து 2 ஆயிரம் எருமை கன்றுகளை தத்தெடுத்துள்ளது.

மேலும் எருமை மாடுகள் வளர்க்கும் செலவை தாங்க முடியாத விவசாயிகளுக்கு கிராம அளவிலான தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உதவி செய்யப்படும்.

தமிழகத்தில் எருமைகளின் எண்ணிக்கை கடந்த 2007-ம் ஆண்டு 11.8 லட்சமாக இருந்தது. 2019 கணக்கெடுப்பின் படி 5.19 லட்சமாக குறைந்து இருக்கிறது.

பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் எருமைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அந்த மாநிலங்களில் பால் உற்பத்தியும் மேம்பட்டு உள்ளது.

எனவே தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்தின் கீழ் எருமைகள் தத்தெடுக்க ரூ.8.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 6 மாத வயதுடைய பெண் எருமை கன்றுகள் தேர்வு செய்யப்படும். அதற்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டு 32 மாதம் வரை கண்காணித்து உணவு மற்றும் தாது கலவைகள் வழங்கப்படும்.

பால் பண்ணையாளர்களுக்கு புரோட்டீன் நிறைந்த தீவனம், தாது கலவைகளை 26 மாதங்களுக்கு வழங்குவதுடன் இலவச மருத்துவ சேவைகளும் வழங்கப்படும்.

இந்த பராமரிப்பின் மூலம் ஒரு நாளைக்கு 1.5 கிலோ வரை எடை அதிகரிக்கும். பின்னர் 26 முதல் 32 மாதம் வரை ஒரு நாளைக்கு 1.75 கிலோ அதிகரிக்கும். கன்றுகளின் எடையை வாரந்தோறும் ஆவின் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை டாக்டர்கள் கண்காணிப்பார்கள்.

எருமை வளர்ப்பு விவசாயிகளுக்கு லாபம் தரக்கூடியதாக இருந்தாலும் செலவு மற்றும் தட்பவெப்ப நிலைகளால் சந்திக்கும் பிரச்சனைகளை மனதில் கொண்டு எருமை வளர்ப்பில் ஆர்வம் காட்டுவதில்லை.

இந்த புதிய திட்டத்தின் மூலம் அறிவியல் தொழில் நுட்ப முறையில் செயற்கை கரூவூட்டல் மூலம் இனப்பெருக்க நுட்பங்களையும் செயல்படுத்தி உள்ளனர்.

இந்த திட்டத்தின் மூலம் கொழுப்பு சத்து நிறைந்த பால் உற்பத்தி மேம்படும். ஆவின் நிர்வாக இயக்குனர் எஸ்.வினீத் கூறும்போது, கன்று வளர்ப்பு முறைகள் மற்றும் தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல் உயர்தர பாலுக்கான முதன்மை ஆதாரமாக விளங்கும் எருமை வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவார்கள் என்றார்.

Tags:    

Similar News