தமிழ்நாடு (Tamil Nadu)

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 3 நாட்களில் 4 அடி உயர்ந்தது

Published On 2023-11-06 04:23 GMT   |   Update On 2023-11-06 04:23 GMT
  • கோவை மாவட்டம் பில்லூர் அணையிலிருந்து நீர்மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
  • கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 400 கன அடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கோவை மாவட்டம் பில்லூர் அணையிலிருந்து நீர்மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதன் காரணமாகவும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 67.11 அடியாக உள்ளது. அதாவது கடந்த 3 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது.

அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 926 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 400 கன அடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றுக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News