அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி திருப்பூரில் மாடுபிடி வீரர்கள் போராட்டம்
- எங்கள் பகுதியில் காளை வளர்ப்போரின் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது.
- மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிக்காக அலகுமலை ஜல்லிக்கட்டு திடலில் பணிகள் நடைபெறாமல் உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் ஏறு தழுவுதல் ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் மாடுபிடி வீரர்கள் இன்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
அலகுமலை ஜல்லிக்கட்டு விழா கடந்த 4 ஆண்டுகளாக வெகு சிறப்பாக நடைபெற்றது. அதேபோல இந்த ஆண்டு ஜல்லிகட்டு விழா நடைபெற மாவட்ட நிர்வாகம் அதற்காக ஏற்பாடு செய்து தறுமாறு கேட்டுக் கொள்கிறோம். எங்கள் பகுதியில் காளை வளர்ப்போரின் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது.
காங்கயம் காளைகளின் இனப்பெருக்கம் அதிகமாகி உள்ளது. நாட்டுமாடு வளர்ப்போரின் நலன் கருதி ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்து கால்கோல் விழா நடைபெற்றது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிக்காக அலகுமலை ஜல்லிக்கட்டு திடலில் பணிகள் நடைபெறாமல் உள்ளது.
எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.