ராஜபாளையத்தில் விபத்து: பஸ் மோதி கால்வாயில் கவிழ்ந்த ஆட்டோ- பெண் பலி
- ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் முருகேசனை கைது செய்தனர்.
- விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் முருகேசனை கைது செய்தனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி பூரணபுஷ்பம் (வயது 55). இவரது தந்தை பழனிநாதன்(75).
இவர்கள் செங்கோட்டையில் இருந்து காசிக்கு செல்லும் சுற்றுலா ரெயில் முதன்முறையாக இயக்கப்பட்டதால் அதில் செல்ல திட்டமிட்டு முன்பதிவு செய்திருந்தனர். இந்த ரெயில் ராஜபாளையத்துக்கு அதிகாலை 5 மணிக்கு வரும் என்பதால் மகளும், தந்தையும் வீட்டில் இருந்து புறப்பட்டனர்.
முகவூரில் இருந்து ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்திற்கு அதிகாலை 4.30 மணிக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து சாமிராஜ் என்பவரின் ஆட்டோவில் ரெயில் நிலையத்திற்கு சென்றனர். புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் சென்றபோது எதிர்திசையில் மதுரையில் இருந்து சங்கரன்கோவில் சென்ற அரசு பஸ் ஆட்டோ மீது மோதியது.
இதில் உருக்குலைந்த ஆட்டோ சாலையோரத்தில் உள்ள கால்வாயில் கவிழ்ந்து விழுந்தது. இதில் பூரணபுஷ்பம் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது தந்தை பழனிநாதன் படுகாயம் அடைந்தார். ஆட்டோ டிரைவர் சாமிநாதனுக்கு கால் முறிவு ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பூரணபுஷ்பம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பழனிநாதன் மற்றும் ஆட்டோ டிரைவர் சாமிநாதனையும் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் முருகேசனை கைது செய்தனர்.