சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
- முதலமைச்சர் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் முகாமை தொடங்கி வைப்பதற்காக காரில் புறப்பட்டு தருமபுரி மாவட்டம் தொப்பூருக்கு சென்றார்.
- பாதுகாப்பு ஏற்பாடுகளை சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, போலீஸ் சூப்பிரண்டுகள் சிவகுமார், ஸ்டீபன் சேசுபாதம் துணை கமிஷனர்கள் செய்திருந்தனர்.
ஓமலூர்:
தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்களை பதிவு செய்ய இன்று முதல் 35 ஆயிரம் 923 முகாம்கள் நடைபெற உள்ளன.
இந்த முகாமினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார்.
இதற்காக இன்று காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார்.
விமான நிலையம் முன்பு காவல்துறை சார்பில் நடந்த அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார். அவருக்கு விமான நிலையத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கலெக்டர் கார்மேகம், மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம். செல்வகணபதி, பார்த்திபன் எம்.பி. மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பூங்கொத்து, புத்தகம் கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து முதலமைச்சர் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் முகாமை தொடங்கி வைப்பதற்காக காரில் புறப்பட்டு தருமபுரி மாவட்டம் தொப்பூருக்கு சென்றார்.
வழிநெடுகிலும் அவருக்கு சாலையின் இருபுறமும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் விமான நிலையத்தில் இருந்து தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, போலீஸ் சூப்பிரண்டுகள் சிவகுமார், ஸ்டீபன் சேசுபாதம் துணை கமிஷனர்கள் செய்திருந்தனர்.