தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி மயங்கிய காகத்திற்கு மறுஉயிர் கொடுத்த தீயணைப்பு வீரர்

Published On 2024-09-20 05:15 GMT   |   Update On 2024-09-20 05:15 GMT
  • காகத்தை அழைத்துச்சென்று தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள நிழல் பகுதியில் விட்டனர்.
  • காகத்தை காப்பாற்றிய தீயணைப்பு வீரர் வெள்ளத்துரைக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கோவை:

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் செயல்பட்டு வருகிறது.

இதன் அருகே டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி) ஒன்றும் உள்ளது. சம்பவத்தன்று மின்மாற்றியின் மீது காகம் ஒன்று அமர்ந்திருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக காகத்தின் மீது மின்சாரம் தாக்கியது. இதில் காகம் சாலையில் தூக்கி வீசப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தது.

இதனை தீயணைப்பு நிலையத்தில் பணியில் இருந்த வெள்ளத்துறை என்ற தீயணைப்பு வீரர் பார்த்தார். உடனடியாக ஓடி சென்று அவர், காகத்தை தூக்கி பரிசோதித்து பார்த்தார்.

அப்போது காகம் இதயத்துடிப்பு இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காகத்திற்கு மீண்டும் இதயத்துடிப்பை வரவைப்பதற்காக, தீயணைப்பு வீரர் வெள்ளத்துரை சி.பி.ஆர் எனப்படும் முதலுதவி சிகிச்சை செய்தார்.

பின்னர், காகத்தின் வாயில் காற்றை ஊதினார். இதில் சிறிது நேரத்தில் காக்கை உயிர் பிழைத்தது. தொடர்ந்து, அந்த காகத்தை அழைத்துச்சென்று தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள நிழல் பகுதியில் விட்டனர்.

சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பிய அந்த காகம் அங்கிருந்து பறந்து சென்றது. மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்த காகத்தை தீயணைப்பு வீரர் ஒருவர், சி.பி.ஆர்.சிகிச்சை செய்து காப்பாற்றிய சம்பவம் கோவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பொதுமக்கள் பலரும், காகத்தை காப்பாற்றிய தீயணைப்பு வீரர் வெள்ளத்துரைக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News