தமிழ்நாடு

கோவையில் ஆன்லைன் விளையாட்டில் பணம் இழந்த நகை தொழிலாளி தற்கொலை

Published On 2024-07-27 07:30 GMT   |   Update On 2024-07-27 07:30 GMT
  • ஆன்லைன் சூதாட்டத்தில் எவ்வளவு பணம் இழந்தார் என்பது தெரியவில்லை.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை, கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது49). இவருக்கு பிரேமா(47) என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

ராதாகிருஷ்ணன், கெம்பட்டி காலனி 3-வது தெருவில் நகை பாலிஷ் செய்யும் தொழில் செய்து வந்தார்.

இந்த நிலையில் ராதாகிருஷ்ணனுக்கு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபாடு இருந்துள்ளது. தினமும் தனது செல்போனில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் பணத்தை இழந்துள்ளார்.

இழந்தை பணத்தை மீட்க கடன் வாங்கியும் விளையாடியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பணத்தையும் அவர் இழந்து விட்டார். கடன் ஏற்பட்டால் ராதாகிருஷ்ணனுக்கு மன உளைச்சல் ஏற்பட்டது.

கடந்த சில நாட்களாகவே அவர் யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர், நகை பாலிஷ் செய்ய பயன்படுத்தும் சயனடை குடித்து விட்டார்.

சிறிது நேரத்தில் மயங்கிய அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது மனைவி அக்கம்பக்கத்தினர் உதவியுடன், அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டதும் அவரது மனைவி, மகள் கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பெரியகடை வீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் எவ்வளவு பணம் இழந்தார் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News