திரைப்படங்கள் ரிலீசாக தி.மு.க.வை ரஜினிகாந்த் பாராட்டி பேசுகிறார்-பொள்ளாச்சி ஜெயராமன்
- நாடு முழுவதும் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும் தமிழக மக்களுக்கு எதிராக உள்ளது.
- தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.
திருப்பூர்:
அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் இன்று நடை பெற்றது. நிகழ்ச்சியில் உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டையை வழங்கி மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசியதாவது:-
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக்கு ஏன் வாக்களித்தோம் என்று பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். தேர்தலுக்கு பின்பு நாடு முழுவதும் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும் தமிழக மக்களுக்கு எதிராக உள்ளது.
தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இது தான் தி.மு.க.வின் பரிசாக உள்ளது. திருப்பூரில் தொழில் மிகவும் நசிந்து விட்டது. இதனை சரிசெய்ய தமிழக முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தனது திரைப்படங்கள் தமிழ்நாட்டில் ரிலீசாக வேண்டும் என்பதற்காகவே ரஜினி, தி.மு.க.வை பாராட்டி பேசி வருகிறார். தி.மு.க.,-பா.ஜ.க., இடையே ரகசிய கூட்டணி உருவாகியுள்ளது. 2 கட்சிகளும் நெருங்கி வரத் தொடங்கியுள்ளது.
அமெரிக்கா செல்லும் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அரசின் உதவிகள் தேவைப்படுகிறது. தமிழகத்தில் ஸ்டாலின் தலைமைக்கு கீழ் உள்ள காவல்துறை செயல்படவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.