தமிழ்நாடு (Tamil Nadu)

சுட்டெரிக்கும் வெயிலால் சரியும் அமராவதி அணை நீர்மட்டம்

Published On 2024-09-22 05:48 GMT   |   Update On 2024-09-22 05:48 GMT
  • அணைக்கு வந்து கொண்டுள்ள தண்ணீரும் குறைந்து வருகிறது.
  • அணைக்கு நீர்வரத்து குறைந்தது விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.

உடுமலை:

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் மூலமாக மழைக் காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள விளை நிலங்கள் பயன்பெறும் வகையில் பாசனத்திற்கும், சுற்றுப்புற கிராமங்களுக்கு குடிநீர் திட்டத்தின் மூலமாக தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த ஜூலை மாதம் பலத்த மழை பெய்தது. அதைத் தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு கடந்த 66 நாட்களாக முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது மழைப்பொழிவு குறைந்து வனப்பகுதியில் வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து குறைந்து விட்டது. இதனால் அணைக்கு வந்து கொண்டுள்ள தண்ணீரும் குறைந்து வருகிறது. ஆனாலும் நீர் வரத்து மற்றும் நீர் இருப்பை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அணைக்கு நீர்வரத்து குறைந்தது விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.

இதனால் வடகிழக்கு பருவ மலையை எதிர்நோக்கி காத்துள்ளனர். அதற்கு முன்பாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதனால் அணையில் நீர் இருப்பு குறைந்து வடகிழக்கு பருவ மழையால் ஏற்படுகின்ற நீர் இருப்பை தேக்கி வைக்க இயலும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

இன்று காலை 6 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 88.98 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 35 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Tags:    

Similar News