தமிழ்நாடு (Tamil Nadu)

தமிழக ஆளுநரை திரும்பப்பெற வேண்டும்.. முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

Published On 2024-10-18 13:12 GMT   |   Update On 2024-10-18 13:29 GMT
  • தற்செயலாக அல்லாமல் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது
  • தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் தவிர்த்துவிட்டு பாடச் சொல்வாரா?

சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடந்த 'ஹிந்தி மாத' நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி இடம்பெறவில்லை.

திராவிடம் குறித்து தொடர்ந்து கடும் விமர்சித்து வரும் சூழலில் தற்போது திராவிடம் என்று வார்த்தை இடம்பெற்ற வரி தற்செயலாக அல்லாமல் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஆர்.என்.ரவி ஆளுனரா? ஆரியநரா? என்று தமிழக முதல்வர் ஸ்டாலின்  கேள்வி எழுப்பியுள்ளார்.  இது தொடர்பாக முதல்வர் கூறியதாவது, திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் ஆளுநர் இழிவுபடுத்துகிறார்

திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர், தேசியகீதத்தில் வரும் திராவிடத்தையும் தவிர்த்துவிட்டு பாடச் சொல்வாரா? தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News