மார்த்தாண்டத்தில் நகைக்கடையில் 75 பவுன் கொள்ளை
- இன்று காலையில் கடையை திறக்க வந்தபோது முன்பக்க சட்டர் உடைக்கப்பட்டிருந்தது.
- போலீசார் விரைந்து வந்து கடையை திறந்து பார்த்தபோது 75 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
குழித்துறை:
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையை அடுத்த சி.எஸ்.ஐ. வணிக வளாகத்தில் நகைக்கடை செயல்பட்டு வருகிறது.
முன்னாள் வர்த்தக சங்க செயலாளர் ராஜா செல்வின் ராஜ் என்பவர் இந்தக்கடையை நடத்தி வருகிறார். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் அவர் கடையை அடைத்துச் சென்றார். இன்று காலையில் கடையை திறக்க வந்தபோது முன்பக்க சட்டர் உடைக்கப்பட்டிருந்தது.
இதனைக்கண்டு செல்வின்ராஜ் அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என கருதிய அவர் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் விரைந்து வந்து கடையை திறந்து பார்த்தபோது 75 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மொத்தம் 600 கிராம் எடையுள்ள கொலுசு, கம்மல், மாலை, மோதிரம், செயின் ஒட்டியாணம் போன்றவை கொள்ளை போய் இருப்பதாக ராஜா செல்வின்ராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். அப்பகுதியில் கடைகளில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வுசெய்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த கடையில் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை திருட்டு சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.