தமிழ்நாடு (Tamil Nadu)

கொடநாடு கொலை வழக்கு: தொழில் அதிபர் மகனிடம் 2-வது நாளாக விசாரணை

Published On 2022-07-08 05:58 GMT   |   Update On 2022-07-08 09:28 GMT
  • செந்தில்குமாரிடம் இன்று 2-வது நாளாக ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.
  • இன்று காலை ஆறுமுகசாமி கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள விசாரணை அலுவலகத்தில் ஆஜரானார்.

கோவை:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.

இந்த வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தற்போது மறு விசாரணை நடந்து வருகிறது.

தனிப்படை போலீசார் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக பணியாற்றிய பூங்குன்றன், சஜிவன் மற்றும் சசிகலாவிடமும் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கோவையை சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமியின் மகனான செந்தில்குமாரிடம் விசாரணை நடத்த முடிவு செய்த தனிப்படையினர் அவருக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பினர்.

நேற்று அவர் கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் உள்ள விசாரணை அலுவலகத்தில் ஆஜராகினார். அவரிடம் ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் இன்று 2-வது நாளாக செந்தில்குமாரிடம் ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர். அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். அவரும் தனக்கு தெரிந்த தகவல்களை தனிப்படையினரிடம் தெரிவித்தார். அவற்றை போலீசார் பதிவு செய்து கொண்டனர்.

இதற்கிடையே செந்தில்குமாரின் தந்தையும் மணல் ஒப்பந்ததாரரும், தொழில் அதிபருமான ஆறுமுகசாமிக்கும் சம்மன் அனுப்பினர். அதன்படி இன்று காலை ஆறுமுகசாமி கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள விசாரணை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

ஒரே நேரத்தில் தந்தை, மகனிடம் கொடநாடு வழக்கு தொடர்பாக தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News