மணிப்பூர் கலவரம்: மத்திய அரசை கண்டித்து சென்னையில் இன்று கனிமொழி எம்.பி. ஆர்ப்பாட்டம்
- பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறும் மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் அரசு தவித்து வருகிறது.
- தமிழ்நாட்டில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் நாளை காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது.
சென்னை:
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வன்முறை-தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறும் மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்ப டுத்த முடியாமல் அரசு தவித்து வருகிறது.
சமீபத்தில் அங்கு பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு வீதியில் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்டனர். மனிதாபிமான மற்ற இந்த கொடுமையான சம்பவம் அனைவரின் உள்ளத்தையும் பதற வைத்தது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத பா.ஜனதா அரசை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் நாளை காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது.
சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று மாலை 4 மணிக்கு கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு முன்னி லையில் மாநில மகளிர் அணி நிர்வாகிகள் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திரளாக பங்கேற்கின்றனர். கழக மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர் 128-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரத்னா லோகேஸ்வரன் மகளிர் தொண்டரணி, மாவட்ட அமைப்பாளர் மோனிஷா கருணாநிதி உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஏராளமான மகளிர் அணியினருடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
அங்கு திரளாக உள்ள மகளிர் அணியினர் மத்திய அரசை கண்டித்து பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தனர்.