தமிழ்நாடு (Tamil Nadu)

ஜெயக்குமார் வழக்கு: போலீசார் ஒப்படைத்த ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் சி.பி.சி.ஐ.டி. தீவிரம்

Published On 2024-05-28 05:56 GMT   |   Update On 2024-05-28 05:56 GMT
  • சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவினர் மீண்டும் கரைசுத்து புதூருக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 32 பேருக்கும் இதுவரை சம்மன் அனுப்பவில்லை.

நெல்லை:

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று ஜெயக்குமாரின் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் ஜெயக்குமார் உடல் கிடந்த அவரது தோட்டத்திலும் சென்று மீண்டும் ஆய்வில் ஈடுபட்டனர். தோட்டத்தை முழுமையாக அளவீடு செய்தனர். பின்னர் ஆய்வு நடத்தி கிடைக்கப்பெற்ற தடயங்களை சேகரித்தனர்.

இந்நிலையில் இன்று காலை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவினர் மீண்டும் கரைசுத்து புதூருக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 4 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. நடத்திய விசாரணை மற்றும் தோட்டத்தில் நடத்திய ஆய்வுகளில் கிடைத்துள்ள சில தடயங்களையும், ஏற்கனவே நெல்லை மாவட்ட போலீசார் தங்களது விசாரணையின்போது சேகரித்து ஒப்படைத்துள்ள தடயங்களையும் இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான குழுவினர் ஒப்பிட்டு பார்த்து அதன்மூலம் ஏதேனும் புதிய தகவல்கள் கிடைக்குமா? என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும் மாவட்ட போலீசார் விசாரணையில் என்னென்ன செய்தார்கள் என்பதை ஆய்வு செய்து, அவர்கள் செய்ய தவறியவற்றை குறிப்பெடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 32 பேருக்கும் இதுவரை சம்மன் அனுப்பவில்லை. தற்போது வழக்கு தொடர்பான ஆவணங்களை சரிசெய்து வருகிறோம்.

அதன்பின்னர் அவர்களுக்கு பதிவு தபால் அனுப்புவதற்கு தேவையான பணிகள் நடக்கும். இன்னும் சில நாட்களில் சம்மன் அனுப்பப்படும். அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களை ஒரு வாரத்தில் அழைத்து விசாரணை நடத்தப்படும் என சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News