தமிழ்நாடு (Tamil Nadu)

கச்சத்தீவை மீட்டெடுத்தால் தான் தமிழக மீனவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும்- ஆர்.பி.உதயகுமார்

Published On 2024-08-02 07:00 GMT   |   Update On 2024-08-02 07:00 GMT
  • மீனவ சமுதாயம் இந்த அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளது.
  • கச்சத்தீவை மீட்க, அதற்காக குரல் கொடுக்க, அழுத்தம் கொடுக்க தி.மு.க. அரசு முன்வர வேண்டும்.

மதுரை:

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கை கடற்படை படகு மோதியதில் ராமேசுவரம் மீனவர் உயிரிழப்பு, ஒருவர் மாயம், இருவர் மீட்பு என்ற நிகழ்வுகள் மிகவும் கண்டனத்துக்குரிய சம்பவங்களாகும். இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் நிவாரணம் கொடுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதற்கு நிரந்தர தீர்வு காண புரட்சித்தலைவி அம்மா கச்சத்தீவு எங்களது உரிமை என்று குரல் எழுப்பி, கச்சத்தீவை தாரை வார்த்தது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றத்தில் அம்மா, பல்வேறு உச்ச நீதி மன்ற வழக்குகளை மேற்கோள் காட்டி அ.தி.மு.க.வை வாதியாக சேர்த்தார். தொடர்ந்து வருவாய்த் துறையையும் இதிலே ஒரு வாதியாக சேர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எடப்பாடியாரும் இதை செயல் படுத்தினார்.

கச்சத்தீவை மீட்டெடுத்தால் தான் நம்முடைய மீனவர்களுடைய வாழ்வாதாரமும், மீனவருடைய எதிர் காலமும் பாதுகாக்கப்படும். அதற்கு ஒரு நீண்ட நெடிய போராட்டத்தை அம்மாவும், அதனைத் தொடர்ந்து எடப்பாடியாரும் நடத்தி வந்தார்கள்.

கடந்த 2019 ஆண்டில் தி.மு.க. கூட்டணியை சேர்ந்த 38 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். இலங்கை கடற்படை படகு மோதி இன்றைக்கு மீனவர்கள் உயிரிழக்கிறார்கள் என்று சொன்னால் நம்முடைய உரிமையை மீட்பதற்காக குரல் கொடுக்க வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்.

அன்றாடம் கடலுக்கு சென்றுதம் உயிரை பணயம் வைத்து அவர்கள் பிடித்து வருகிற மீனை இங்கே பல்வேறு தடைகளைத் தாண்டி அதை விற்பனை செய்து அதனால் தங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகிற அந்த மீனவர்களுக்கு இந்த அரசு கச்சத்தீவை மீட்க, அதற்காக குரல் கொடுக்க, அழுத்தம் கொடுக்க தி.மு.க. அரசு முன்வர வேண்டும்.

மீனவர் உயிர் என்பது நாம் எளிமையாக கடந்து போய்விடக் கூடாது. தங்கள் வாழ்வாதாரத்திற்காக அவர்கள் போராடிக் கொண்டிருக்கிற வேளையிலே இப்படி உயிரைப் பறிக்கிற சம்பவங்கள் கடலுக்குள்ளே நடைபெறுவதை இந்த அரசு கண்டும் காணாமல் இருப்பது நமக்கு வேதனை அளிக்கிறது.

ஒட்டுமொத்த மீனவ சமுதாயம் இந்த அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளது. எப்பொழுது எல்லாம் தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்கிறதோ அப்பொழுதெல் லாம் இந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டு வீழ்த்தப்படுகிற இந்த துயர சம்பவம் தொடர்ந்து கொண்டே இருப்பதை வரலாறு நமக்கு நினைவூட்டினாலும், இனி வருகிற காலங்கள் இது போன்ற துயர சம்பவங்கள் நிகழாமல் இருக்க இரும்புக்கரம் கொண்டு இதை தடுத்து நிறுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க முன் வருமா?

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News