தமிழ்நாடு (Tamil Nadu)

அ.தி.மு.க.வில் உள்ளது போன்று தி.மு.க.விலும் புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க ஆலோசனை

Published On 2023-10-30 06:35 GMT   |   Update On 2023-10-30 06:35 GMT
  • தி.மு.க.வில் கட்சி ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் சில மாவட்டத்தில் 4 அல்லது 5 சட்டசபை தொகுதிகள் வரை உள்ளன.
  • அனேகமாக டிசம்பர் மாதத்திற்குள் அதற்கான நடவடிக்கைகளை தலைவர் மேற்கொள்வார் என்று கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

சென்னை:

பாராளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் இப்போதே தேர்தலுக்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

அந்த வகையில் தி.மு.க.வில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் மண்டல அளவில் நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் சமயத்தில் பி.எல்.ஏ.-2 முகவர்கள் மூலமாகத்தான் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படும்.

இதனால் தகுதியான கட்சி நிர்வாகிகளை பார்த்து அதில் நியமித்துள்ளனர். இவர்களை ஒன்றிய, நகர கழக செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைத்து வருகின்றன.

தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

இந்நிலையில் சில மாவட்டங்களில் கோஷ்டி பிரச்சினை காரணமாக ஒருங்கிணைந்து செயல்படாமல் சில நிர்வாகிகள் மனக்கசப்புடன் இருப்பதாக தலைமைக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதனால் எந்தெந்த மாவட்டங்களில் பிரச்சினை அதிகம் உள்ளதோ அங்கு கட்சி நிர்வாகிகளிடையே சமரசம் ஏற்படுத்தும் நிகழ்வும் நடந்து வருகிறது. கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு இந்த சமரச முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.

தற்போது பாராளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அ.தி.மு.க.வில் 2 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் உள்ளதை போன்று தி.மு.க. விலும் அதே போன்று மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்தில் சில நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது தி.மு.க.வில் கட்சி ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் சில மாவட்டத்தில் 4 அல்லது 5 சட்டசபை தொகுதிகள் வரை உள்ளன.

தேர்தல் சமயத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் அந்த தொகுதிக்கு உடனடியாக செல்வதில் சுணக்கம் ஏற்படும் என்றும் இதை தவிர்க்க எல்லையை சுருக்கினால் பணிகள் வேகமாக நடைபெறும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக 2 தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர்களை நியமித்தால் அ.தி.மு.க.வுக்கு சரிசமமாக ஈடுகொடுக்க வசதியாக இருக்கும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக ஏற்கனவே இப்பிரச்சினை தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டாலும் அவர் அதை விரும்பவில்லை. அந்த ஆலோசனையை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில் இப்போது மாவட்டங்களை பிரிக்கும் கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அனேகமாக டிசம்பர் மாதத்திற்குள் அதற்கான நடவடிக்கைகளை தலைவர் மேற்கொள்வார் என்று கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

Tags:    

Similar News