தமிழ்நாடு (Tamil Nadu)

3,500 டாஸ்மாக் மது கடைகளில் கூடுதல் கவுண்டர்- தீபாவளிக்கு அதிக சரக்கு விற்க இலக்கு

Published On 2024-10-18 05:40 GMT   |   Update On 2024-10-18 05:40 GMT
  • டாஸ்மாக் கடைகளில் கியூஆர் கோடு ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் வசதியை செயல்படுத்தவும் ஆலோசனை நடந்துள்ளது.
  • இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.600 கோடி அளவுக்கு அதிகபட்ச சரக்கு விற்பனை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை:

தமிழ்நாட்டில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் டாஸ்மாக் மதுக்கடைகளில் எப்போதும் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. ஆண்டுக்கு ஆண்டு விற்பனையும் அதிகரித்து வருகிறது.

பஸ் நிலையம், ரெயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட மக்கள் நெருக்கம் அதிகம் கூடும் பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் எப்போதும் அதிகம் வருவதால் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக 2 கவுண்டர் திறக்கப்பட்டு மதுபாட்டிலை விற்பனை செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 4,829 மதுக்கடைகளில் கிட்டத்தட்ட 3,500 கடைகளில் தினசரி ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் சில கடைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கவுண்டர்கள் உள்ளன. கடையில் 2 பேர் மது பாட்டில்களை விற்பனை செய்கின்றனர். ஆனாலும் எல்லா கடைகளிலும் இவ்வாறு செய்ய முடியவில்லை.

இடப்பற்றாக்குறை, வேலைக்கு ஆள் கிடைக்காத சூழல் உள்ளது. இதை கருத்தில் கொண்டு தினசரி ரூ.2 லட்சத்துக்கு மேல் விற்பனையாகும் 3,500 மதுக்கடைகளிலும் கூடுதல் விற்பனை கவுண்டர்களை ஒரு வாரத்திற்குள் அமைக்க அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

தீபாவளி பண்டிகைக்காக விதவிதமான ரகங்களில் கூடுதல் சரக்குகள் டாஸ்மாக் கடைகளுக்கு வர உள்ளதால் அதை வைப்பதற்கு தேவையான இட வசதிகளை உருவாக்குமாறு விற்பனை மேலாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டு தீபாவளிக்கும் மதுக்கடைகளில் விற்பனை என்பது 3 மடங்கு அதிகமாக இருக்கும். கடந்த வருடம் தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனை நடந்தது. அதிலும் மதுரை மண்டலத்தில் தான் ரூ.53 கோடிக்கு விற்பனை நடந்து புதிய உச்சத்தை தொட்டது.

இதை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.600 கோடி அளவுக்கு அதிகபட்ச சரக்கு விற்பனை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருகிற 30, 31-ந்தேதி, நவம்பர் 1, 2, 3 ஆகிய 5 நாட்கள் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் களை கட்டும் என்பதால் கூடுதல் சரக்குகளை இருப்பு வைக்க இப்போதே முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

டாஸ்மாக் கடைகளில் கியூஆர் கோடு ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் வசதியை செயல்படுத்தவும் ஆலோசனை நடந்துள்ளது.

இட வசதி உள்ள கடைகளில் தீபாவளி கூட்டத்தை சமாளித்து விடும் நிலையில் சிறிய கடைகளில் கூட்டத்தை சமாளிக்க கூடுதல் பணியாளர்களை உதவிக்கு வைத்துக் கொள்வது குறித்து கடை விற்பனையாளர்கள் அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News