தமிழ்நாடு (Tamil Nadu)

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று கோவையில் பாராட்டு விழா

Published On 2023-04-04 04:38 GMT   |   Update On 2023-04-04 04:38 GMT
  • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்தி பேசுகிறார்கள்.
  • பொதுச் செயலாளராக பதவியேற்ற பின் முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி கோவை வருவதால் அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கோவை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி, பதவியேற்புக்கு பின் முதன்முறையாக இன்று மாலை கோவை வருகிறார்.

கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு கோவை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று மாலை பாராட்டு விழா நடக்கிறது. இந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உரையாற்றுகிறார்.

இதற்காக இன்று பிற்பகல் சேலத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு கோவை வருகிறார். அவருக்கு கோவை அவினாசி ரோடு விமான நிலைய பகுதியில் இருந்து காளப்பட்டியில் விழா நடைபெறும் மண்டபம் வரை அ.தி.மு.க.வினர் திரண்டு வரவேற்பு அளிக்கிறார்கள்.

அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு எடப்பாடி பழனிசாமி விழா மண்டபத்துக்கு செல்கிறார்.

விழாவுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்குகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்தி பேசுகிறார்கள்.

பொதுச் செயலாளராக பதவியேற்ற பின் முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி கோவை வருவதால் அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனால் இன்றைய விழாவில் கோவை மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி அந்த பகுதியில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

விழா முடிந்த பின்னர் எடப்பாடி பழனிசாமி, கோவை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.

Tags:    

Similar News