அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் 16-ந்தேதி நடக்கிறது: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
- அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் வருகிற 16-ந்தேதி பகல் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது.
- உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் குறித்தும், கழகத்தில் உறுப்பினர்களை சேர்ப்பது சம்பந்தமாகவும், அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் வருகிற 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பகல் 1.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கழக அவைத் தலைவர் டாக்டர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.
கழக செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.
உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.