தமிழ்நாடு (Tamil Nadu)

எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

Published On 2023-03-28 07:16 GMT   |   Update On 2023-03-28 07:16 GMT
  • பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு மாதவரம் மூர்த்தி இனிப்பு ஊட்டினார்.
  • எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தொண்டர்கள் வாழ்த்து கோஷங்களை எழுப்பினார்கள்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அறிவிக்கப்பட்டதையொட்டி அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அவரை தொண்டர்கள் வரவேற்றனர். பட்டாசு வெடித்து உற்சாகப்படுத்தினர். காரை விட்டு இறங்கிய எடப்பாடி பழனிசாமி மீது மலர்களை தூவி வரவேற்றனர். அவர் முதலில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு முன்பு நின்று கைகூப்பி வணங்கினார்.

பின்னர் 2 தலைவர்களின் கால் அடியில் தலை வைத்து மரியாதை செலுத்தினார். அவர் மன உருக்கத்துடன் இருவரையும் வணங்கிய பின்னர் கட்சி அலுவலகத்துக்குள் சென்றார்.

பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு மாதவரம் மூர்த்தி இனிப்பு ஊட்டினார். அதையடுத்து தொண்டர்களுக்கும், நிர்வாகிகள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினர். அவ்வை சண்முகம் சாலையில் சென்ற பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

தலைமை கழகத்தில் திரண்டு இருந்த தொண்டர்கள் ஒவ்வொருவரும் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அ.தி.மு.க.வினர் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன், தளவாய் சுந்தரம், டி.ஜெயக்குமார், பா.பென்ஜமின், வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், உதயகுமார், பா.வளர்மதி, கோகுல இந்திரா, சின்னையா மற்றும் மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, ஆதிராஜாராம், வி.என்.ரவி, வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், கே.பி. கந்தன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், அசோக் உள்ளிட்ட நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தொண்டர்கள் வாழ்த்து கோஷங்களை எழுப்பினார்கள்.

இதனிடையே எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதை கொண்டாடும் விதமாக 150 கிலோவில் தயாரிக்கப்பட்ட லட்டுவை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்ற எடப்பாடி பழனிசாமி பின்னர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

Tags:    

Similar News