தமிழ்நாடு (Tamil Nadu)

ஈரோடு மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது- விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2024-05-20 05:51 GMT   |   Update On 2024-05-20 05:51 GMT
  • குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது.
  • குண்டேரி பள்ளம் அணைப்பகுதியில் மழை பெய்து வருவதால் கடந்த இரண்டு நாட்களில் 3 அடி உயர்ந்துள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர் வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ஈரோடு புறநகர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து வருகிறது. இதேபோல் மற்ற அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு 762 கன அடி நீர் அதிகரித்து வந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 45.18 அடியாக உள்ளது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 22.23 அடியாக உள்ளது. குண்டேரி பள்ளம் அணைப்பகுதியில் மழை பெய்து வருவதால் கடந்த இரண்டு நாட்களில் 3 அடி உயர்ந்துள்ளது. 33.45 அடி கொள்ளளவு கொண்ட வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 17.09 அடியாக உள்ளது. 30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணை நீர்மட்டம் கடந்த ஒன்றரை மாதமாக முற்றிலும் வற்றிப் போய் உள்ளது. தொடர்ந்து அணைப்பகுதியில் மழை பெய்து வருவதால் நீர்மட்டமும் சற்று உயர்ந்து உள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News