தமிழ்நாடு

திருமாவளவன் அழைப்பு பற்றி கட்சித் தலைமை முடிவு செய்யும்- ஜெயக்குமார்

Published On 2024-09-10 07:58 GMT   |   Update On 2024-09-10 07:58 GMT
  • குடிக்கிறவர்களின் எண்ணிகையை தமிழ்நாட்டில் அதிகப்படுத்தி ஒரு வரலாறு படைத்ததுதான் தி.மு.க. ஆட்சியின் சாதனை.
  • அ.தி.மு.க. என்பது தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் மக்கள் இயக்கம்.

மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க.வும் பங்கேற்கலாம் என்று திருமாவளவன் அழைப்பு விடுத்திருப்பது பற்றி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருப்பதாவது:-

மது என்பது சமுதாயத்துக்கு மிகப்பெரிய கேடு. குறிப்பாக தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் பூரண மது விலக்கு கொண்டு வருவோம் என்று குறிப்பிட்டு உள்ளனர்.

அ.தி.மு.க. ஆட்சியின் போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கையில் பதாகையுடன் பூரண மது விலக்கு வேண்டும் என்று வீட்டு முன்பு கோஷமிட்டு போராடினார். இதை அனைவரும் அறிவார்கள்.

அதன் பிறகு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாபாரம் ஆகாத 500 மதுக்கடையை மூடிவிட்டு அதற்கு பதிலாக எப்.எல்.2 லைசென்சு,1,500 கடைகளுக்கும், 3 ஆயிரம் மனமகிழ் மன்றங்களுக்கும் லைசென்சு கொடுத்து விட்டு அதற்கு பிறகு ரூ.35 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.42 ஆயிரம் கோடியாக மதுக்கடை வருமானத்தை உயர்த்தி விட்டு, குடிக்கிறவர்களின் எண்ணிகையை தமிழ்நாட்டில் அதிகப்படுத்தி ஒரு வரலாறு படைத்ததுதான் தி.மு.க. ஆட்சியின் சாதனை.

அது தோழமையில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு இப்போது பிடிக்கவில்லை. அதன் அடிப்படையில்தான் முதலில் திருமாவளவன் அவர்களுக்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறார்.

குரல் கொடுத்தது மட்டுமின்றி ஒரு நல்ல விசயத்துக்காக அவர் மாநாடு நடத்துகிறார். இந்த மாநாடு நல்ல நோக்கத்துக்காக நடைபெறும் மாநாடு என்ற அடிப்படையில் அ.தி.மு.க.வுக்கு ஒரு அழைப்பு விடுத்துள்ளார்.

அ.தி.மு.க. என்பது தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். மக்களின் பேராதரவு பெற்றுள்ள இயக்கம் அ.தி.மு.க. என்பதால் அந்த அடிப்படையில் இன்று அழைப்பு கொடுத்துள்ளார்.

இதில் கலந்து கொள்வதா? இல்லையா? என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும்.

இவ்வாறு ஜெயக்குமார் கூறி உள்ளார்.

Tags:    

Similar News