குளித்தலை அருகே நள்ளிரவு கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் வங்கி அதிகாரி பலி
- சீதாராமன் இடுப்பாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
- சீதாராமனின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
குளித்தலை:
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ரோடு ஆபிரகாம் பண்டிதர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீதாராமன் (வயது 34). இவர் அங்குள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
மதுரை மாவட்டம் வில்லாபுரம் மணிகண்டன் நகரை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 26) . இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
நண்பர்களான இவர்கள் இருவரும் கோவையில் நேற்று நடைபெற்ற தனியார் வங்கி மேலாளர்களின் ஆலோசனை கூட்டத்திற்கு சென்றனர். பின்னர் ஒரு காரில் இருவரும் வீடு திரும்பினர்.இந்த கார் நேற்று நள்ளிரவு குளித்தலை அருகே திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் வந்த போது விபத்துக்குள்ளானது. திருச்சியில் இருந்து கரூர் நோக்கி தைல மரம் ஏற்றிச் சென்ற லாரியும் அந்த காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் சீதாராமன் இடுப்பாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். திருச்சி மேலாளர் விக்னேஷ் படுகாயத்துடன் தப்பினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குளித்தலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து இறந்த சீதாராமனின் உடலை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சீதாராமனின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். உறவினர்கள் அவரை தஞ்சாவூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதித்துள்ளனர்.
மனைவி பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் விபத்தில் கணவர் இறந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.