தமிழ்நாடு (Tamil Nadu)

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆவாரா? கேள்விக்கு ஆவேசமடைந்த அமைச்சர் துரைமுருகன்

Published On 2024-09-22 04:56 GMT   |   Update On 2024-09-22 04:56 GMT
  • தடுப்பணையினை புனரமைப்பது தொடர்பாக, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • தமிழகத்தில் எங்கு தண்ணீர் தேவைகள் இருக்கிறதோ அதனை அறிந்து அணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே பாலாற்றில் கடந்த 1857-ம் ஆண்டில் கட்டப்பட்ட பாலாறு அணைக்கட்டு உள்ளது. இந்த பாலாறு அணைக்கட்டு மூலமாக ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்குட்பட்ட விளைநிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.

இந்த அணைக்கட்டினை ரூ.200 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து அணையில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்வது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

அப்போது அளித்த பேட்டியில் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

தமிழகத்தில் எங்கு தண்ணீர் தேவைகள் இருக்கிறதோ அதனை அறிந்து அணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

1858-ல் கட்டப்பட்ட வாலாஜா தடுப்பணையில் இருந்து தான் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் இந்த தடுப்பணை உள்ளது.

தடுப்பணையினை புனரமைப்பது தொடர்பாக, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தர்மபுரி மாவட்டத்திற்கு காவிரி நீர் வழங்கவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்தில்லை அரசு முடிவெடுத்தால் கண்டிப்பாக செய்வோம். அதை அடிக்கடி பாமக தலைவர் ஜி.கே.மணி சட்டமன்றத்தில் கேட்டு வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவது குறித்து கேள்வி எழுப்பினர்.

இதனைக் கேட்டதும் ஆவேசமடைந்த துரைமுருகன் அந்த கேள்வி எல்லாம் எனக்கு தெரியாது எனக்கூறி எழுந்து சென்றார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

Similar News