தமிழ்நாடு (Tamil Nadu)

118 ஆவணங்களை ஓ.பி.எஸ். தரப்பினர் போலீசில் திருப்பி ஒப்படைத்தனர்- எடப்பாடி பழனிசாமி உரிமை கோரி மனு

Published On 2023-03-16 09:09 GMT   |   Update On 2023-03-16 09:09 GMT
  • அ.தி.மு.க. அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை சைதாப்பேட்டை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
  • சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தங்களிடம் கொடுத்த ஆவணங்கள் அனைத்தையும் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஒப்படைத்து உள்ளனர்.

சென்னை:

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி வானகரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

அதே நாளில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சென்றார். அங்கு பூட்டப்பட்டிருந்த அலுவலகத்தை உடைத்து ஓ.பி.எஸ்.சும் அவரது ஆதரவாளர்களும் கட்சி அலுவலகத்துக்குள் சென்றனர். பின்னர் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அ.தி.மு.க. அலுவலகத்தை சூறையாடி அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்தனர்.

அ.தி.மு.க. அலுவலகத்தில் தலைமை கழகம் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் தனி அறையில் பீரோவில் வைக்கப்பட்டு இருந்தன. இந்த பீரோவை உடைத்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அதில் இருந்த அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் ராயப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணை பின்னர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அ.தி.மு.க. சார்பில் என்னென்ன பொருட்கள் திருடப்பட்டன என்பது பற்றிய பட்டியலை தலைமை கழக நிர்வாகிகள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் வழங்கி இருந்தனர்.

இதையடுத்து அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட அனைத்து ஆவணங்களையும் மீட்கும் முயற்சியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தி தகவல்கள் பெறப்பட்டன. இந்த நிலையில் அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசில் ஒப்படைத்துள்ளனர். தலைமை கழகம் தொடர்பான ஆவணங்கள் வெளிமாவட்டங்களில் உள்ள அ.தி.மு.க. அலுவலக சொத்துக்கள், தலைமை கழகத்தின் பெயரில் கட்சி பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களின் ஆர்.சி.புக் உள்ளிட்ட ஆவணங்கள் உள்பட 118 ஆவணங்களையும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் ஒப்படைத்து உள்ளனர்.

அ.தி.மு.க. அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை சைதாப்பேட்டை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதனால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தங்களிடம் கொடுத்த ஆவணங்கள் அனைத்தையும் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஒப்படைத்து உள்ளனர்.

இதையடுத்து அ.தி.மு.க. அலுவலகம் மற்றும் சொத்துக்கள் தொடர்பான 118 ஆவணங்களையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உரிமை கோரி உள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்கள் சைதாப்பேட்டை கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதுதொடர்பான விசாரணை இன்று நடைபெற உள்ளது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை கழகம் தங்கள் வசமே உள்ளது என்றும் இதுதொடர்பாக ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டி வாதாட உள்ளனர்.

எனவே அ.தி.மு.க. தொடர்பான அனைத்து ஆவணங்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர்கள் கோரி இருக்கிறார்கள்.

இதற்கிடையே ஓ.பி.எஸ். தரப்பினரும் சைதாப்பேட்டை கோர்ட்டில் மனு அளிக்க உள்ளனர். அதில் எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் ஆவணங்களை கொடுக்கக்கூடாது என்று வலியுறுத்த இருக்கிறார்கள்.

அ.தி.மு.க. யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான விவகாரம் முடிவுக்கு வராமல் இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் ஆவணங்களை வழங்கக் கூடாது என்று ஓ.பி.எஸ். தரப்பு வக்கீல்கள் வாதாட உள்ளனர்.

இந்த விசாரணை முடிவில்தான் அ.தி.மு.க. அலுவலக ஆவணங்கள் எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்கப்படுமா? என்பது தெரியவரும்.

Tags:    

Similar News