தமிழ்நாடு (Tamil Nadu)

சுவரொட்டி


ஒற்றை தலைமையை ஏற்க வரும்படி சசிகலாவை வரவேற்று சுவரொட்டி- அதிமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு

Published On 2022-06-18 05:48 GMT   |   Update On 2022-06-18 05:48 GMT
  • ஒற்றை தலைமையை ஓ. பன்னீர்செல்வம் ஏற்க வேண்டும்
  • அ.தி.மு.க.வில் இருந்து தன்னை நிராகரிக்க முடியாது என்று தெரிவித்தார்.

பரமக்குடி:

அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை கோஷம் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையில் ஒற்றை தலைமையை ஓ. பன்னீர்செல்வம் ஏற்க வேண்டும் என்று மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களும் ஒற்றை தலைமையை எடப்பாடி பழனிச்சாமி ஏற்க வேண்டும் என்று மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் சுவரொட்டி ஒட்டினர்.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஓ.‌பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகியோர் ஒன்றுகூடி ஒற்றை தலைமை ஏற்க வாருங்கள் என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது அ‌தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் அ.தி.மு.க. ஒற்றை தலைமையை ஓ.பன்னீர்செல்வம் ஏற்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் சுவரொட்டி ஓட்டியுள்ளனர். ஒற்றை தலைமை கோஷத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அதிகரித்ததால் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வில் இருந்து தன்னை நிராகரிக்க முடியாது என்று தெரிவித்தார். இந்தப் பிரச்சினை எப்போது முடிவுக்கு வரும்? என்று தொண்டர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Tags:    

Similar News